தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நாளை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக இலங்கைப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேநேரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாளை அச்சடித்து விநியோகிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை வினாப்பத்திரத்தில் உள்ள வினாக்களைத் தருவதாகவோ அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் மூலம் வெளிப்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் பகிர்வதற்கும் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது தரப்பினரோ இந்த உத்தரவை மீறினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய முடியும்.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.