ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (18) பெற்றோர் பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறும் கோரியுள்ளனர்.
எவ்வாறாயினும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் சிலர், பரீட்சை திணைக்களத்திற்குள் சென்று கடிதம் ஒன்றை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
பெற்றோர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருவதாகவும், பொலிஸாரும், கலகத் தடுப்புப் பிரிவினரும் அந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2024, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுடன், அதில் 323,879 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
எவ்வாறாயினும், அலவ்வ பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவர் புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் உள்ள சில வினாக்களுக்கு நிகரான வினாக்கள் கொண்ட தாள் ஒன்றை பரீட்சைக்கு முன்னர் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.