தேசபந்து தென்னகோன் நியமனம்; ரணிலை பிரதிவாதியாக பெயரிட அனுமதி

Date:

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று (29) அனுமதி வழங்கியது.

அரசியலமைப்பிற்கு முரணான வகையில் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு இன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த மனு ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியுள்ளமையால் அவரது விடுபாட்டுரிமை நிறைவடைந்துள்ளதாக, குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர் தரப்பின் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மன்றில் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய ரணில் விக்ரமசிங்கவின் பெயரை மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடுவதற்கான இயலுமை காணப்படுவதாக விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

 

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு அனுமதி வழங்கியது.

 

முன்னதாக இந்த மனு மற்றும் இதனுடன் தொடர்புடைய 7 மனுக்கள் தொடர்பான விடயங்கள் உயர் நீதிமன்றத்தால் ஆராயப்பட்டிருந்தன.

குறித்த விடயங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் கடந்த ஜூலை 24ஆம் திகதியன்று மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கி மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அமுலாகும் வகையில் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபர் பதவியில் செயற்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவும் நீதியரசர் குழாத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...