முன்னாள் ஜனாதிபதிகள், எம்.பி.க்களின் சிறப்புரிமை, சலுகைகளை ஆராய குழு நியமனம்

Date:

முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை மற்றும் அவர்களின் தேவை தொடர்பாக எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவித்துள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் சிலரும் ஏற்கனவே இந்த குழுவிடம் விடயங்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பாக தற்போதுள்ள கட்டளை சட்டத்தை ஆராய்ந்து அது தொடர்பான பரிந்துரை வழங்குவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்தக் குழு அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி.சித்திரசிறி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் டி.திசாநாயக்க, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் ஜயந்த புலுமுல்ல ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிக்கையில், இந்தக் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்புரிமை தொடர்பாக தேவையான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.

 

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் தொடர்பான சட்டத்துக்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லம், மூன்று வாகனங்களுக்கான எரிபொருள் மற்றும் தனிப்பட்ட செயலாளருக்கான ஊதியம் முதலான சிறப்புரிமைகளை கொண்டுள்ளனர்.
இருப்பினும் கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளின் கீழ் பல சலுகைகள் உள்ளடக்கப்பட்டு, நீர் கட்டணம், மின்சார கட்டணம் கூட அரசாங்க செலவில் செலுத்தப்பட்டன.
இதற்கமைய ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் ஒவ்வொரு பாதுகாப்பு பிரிவுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புக்காக பொது பாதுகாப்பு அமைச்சு அல்லது வேறு ஏதேனும் அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை இந்தக் குழு ஆராயும்.

 

இவர்களின் பாதுகாப்பு பிரிவுகளுக்கு வாடகை அடிப்படையில் கட்டடங்கள் பெறப்பட்டிருந்தால், மாதாந்த வாடகை மற்றும் வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாகவும் இந்தக் குழு ஆராயுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் இந்த சிறப்புரிமைகளுக்காக மூன்று வருடங்களில் (2022 – 2024) செலவிடப்பட்ட தொகை மத்திய வங்கி பதிவுகளுக்கமைய இருபத்து ஏழு கோடி ரூபாவென தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் இந்தக் குழுவினரின் பராமரிப்புக்காக செலவிடப்பட்ட தொகை ஏழு கோடி ரூபாவென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் இத்தொகை எட்டு கோடி ரூபாவிலிருந்து 11 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...