இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசோரியாவில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து இன்றையதினம் (19) இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த ஆளில்லா விமான தாக்குதல் லெபனானில் இருந்து ஏவப்பட்டுள்ளது என பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
லெபனான் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ட்ரோன் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடு அருகே வெடித்து சிதறியதாகவும், இதில் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த தாக்குதல் நடத்த சமயத்தில் நெதன்யாகு அந்த இல்லத்தில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஜூலை 31 ஆம் திகதி (31) ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
இவர் ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. டெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் ஹனியா வீட்டைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக நேற்று முன்தினம் (17) இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லெபனான் நாட்டில் இருந்து, சிசேரியா பகுதியில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வீட்டிற்கு அருகே உள்ள கட்டடத்தில் ட்ரோன் மோதியதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பிரதமரும், அவரும் மனைவியும் இல்லாததால் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உள்பட எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.