கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் இன்று செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு அருகே அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயிலில் இந்த ஆண்டுகான திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவிழாவின் போது குடோனில் வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீப்பற்றி வெடித்து சிதறியதால் திருவிழாவை காண வந்திருந்த மக்களில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 97 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு இதனை காசர்கோடு மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் உறுதி செய்துள்ளார். அதில் 8 பேருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் வாணவேடிக்கையின் போது பட்டாசுகளில் இருந்து வெளியான தீப்பொறி குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்த காரணத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.