சிலாபம், சிங்கபுர பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (21) நடைபெற்றது.
அந்த விசாரணை அறிக்கையின் படி, குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணையும், அவரது மகளையும் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பின்னர் உடல்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
சிலாபம் சிங்கபுர பகுதியில் நேற்றுக் காலை இரண்டு மாடிகள் கொண்ட வீட்டில் தீப்பிடித்து எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலமும் இரண்டு பெண்களின் சடலங்களும் இருப்பதை பொலிஸார் மீட்டனர்.
51 வயதுடைய தந்தை, 44 வயதுடைய தாய் மற்றும் 15 வயதுடைய அவர்களின் மகள் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
தொண்டை அறுக்கப்பட்டு உயிரிழந்த பெண் சிலாபம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் எனவும், தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த நபர் காணி பிரிவு தொழிலில் ஈடுபட்டு வந்தவர்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயில்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவிக்கு சொந்தமான நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே முரண்பாடு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் விளைவாக இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பான விரிவான விசாரணையையும் ஆரம்பித்துள்ளனர்.