கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்பட்ட பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் சாதாரண உடையில் தாமரை கோபுரத்திற்கு வந்த பாடசாலை மாணவி, அங்கிருந்த காவலர்களை தவிர்த்துவிட்டு அந்த இடத்திலிருந்து கீழே குதித்து தவறான முடிவெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அவரது பையில் இருந்து பாடசாலை சீருடை, புத்தகம் மற்றும் தொலைபேசி ஆகியவை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், மற்றொரு இடத்தில் அவரது காலணிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளார்.
அத்துடன், தாமரை கோபுரத்தில் உள்ள சிசிரிவி காட்சிகள் அவர் தவறான முடிவெடுப்பதற்கு வந்ததை உறுதி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஜூலை இரண்டாம் திகதி அல்டையர் அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இரு மாணவர்களின் நெருங்கிய நண்பர் எனவும்முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சிறுமி தனது நண்பர்களின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மூன்று மாணவர்களும் கொழும்பு சர்வதேச பாடசாலையில் ஒன்றாக கல்விப் பயின்றுள்ளனர். இதன் படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.