முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பத்தரமுல்லையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனநாயக முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றிற்கு கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானியில் வெளியிட்டது.
இந்நிலையில் அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்புகள் வெளியாகிவரும் நிலையில்,இந்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
தேசியப்பட்டியல் வேட்புமனுவுக்கு எதிராக அசாத் சாலியின் தேசிய ஐக்கிய முன்னணியின் ஆதரவாளர்கள் இன்று காலை ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் அச்சம் நிலவுவதால் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.