கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட கைதிகள் பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை எவ்வித அழுத்தங்களும் இல்லாத நிலையிலேயே உள்ளார்ந்த காரணங்களால் தோல்வியடைந்தது என பதவி நீக்கம் செய்யப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காஸாவில் செய்ய எதுவும் இல்லை. முக்கிய சாதனைகள் எட்டப்பட்டுள்ளன, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களை அங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற ஆசையில் மட்டுமே வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்திரத்தன்மையை உருவாக்க இஸ்ரேல் காசாவில் இருக்க வேண்டும் என்ற எண்ணமானது இராணுவ வீரர்களின் உயிருக்கு ஆபத்து. இதன் விளைவாக பாதுகாப்பு ரீதியான பல பிரச்சினைகள் எழுந்தன. இவ்வாறான ஒரு நிலைமை உருவாக்கப்பட்டிருப்பதற்கான தேவை இல்லை.
மேலும் காசாவில் இஸ்ரேலியப் படைகள் நிலைத்திருத்திருப்பதானது தவறானது, அது இராணுவ வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது என யோவ் கேலன்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்டை பதவியில் இருந்து நீக்கிய பிறகு போராட்டங்கள் வெடிக்கத் துவங்கியுள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையின்மை காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக நெதன்யாகு அறிவித்திருந்தார். கடந்த சில மாதங்களாக கேலண்ட் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையத் துவங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மூன்று முக்கியமான விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது என்று கேலண்ட் கூறியிருக்கிறார். காஸாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களை, சில தியாகங்கள் செய்வதன் மூலமாக மீட்டுவிடக் கூடும் என்ற அவரது நம்பிக்கையும் இந்த விவகாரத்தில் ஒன்று.
இந்த சூழலில் நெதன்யாகு பதவி விலகவும், பணயக் கைதிகளை பத்திரமாக மீட்க முக்கியத்துவம் அளிக்கும் நபரை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கவும் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.