சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று இந்திய அணி அறிவித்துவிட்டது.
இதனால் தாங்கள் விளையாடும் போட்டியை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து தாங்கள் விலகி விடுவோம் என்றுபாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இது ஐசிசிக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் பிரச்சனையை சமாளிக்க ஐசிசி ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்காவிட்டால் ஒட்டுமொத்த தொடரையும் தென் ஆப்பிரிக்காவில் நடத்த ஐசிசி திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக மாற்றுத்திட்டத்தை ஐசிசி தீவிரமாக எடுத்து வருகிறது.
மறுபுறம் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஒப்புக்கொள்ள வைக்க ஐசிசி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் துபாயில் போட்டியை நடத்தினாலும் அதற்கான முழு லாபம் டிக்கெட் விற்பனை என அனைத்துமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சேரும் வகையில் ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதனால் இன்னும் ஒரு வாரத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்பான அட்டவணை தீர்மானிக்கப்பட்டு முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிகிறது.இதனிடையே இந்தியா விளையாடும் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றினால் ஐசிசி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது