அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (அ.இ.ஜ.உ.) புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், புத்தளம் தள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் இலவசமாக தேநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இத் திட்டம், நோயாளிகளுக்கு ஊக்கமளிக்கும் நோக்குடனும் சமுதாயத்தின் நலனை முன்னிட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக். ஜிப்னாஸ் (அல்மிஸ்பாஹி) அவர்களின் தலைமையில் கடந்த 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நற்பணியின் மூலம், ஒரு நாளைக்கு 6 கிலோ சீனி மற்றும் 1 கிலோ தேயிலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் 16 தேநீர் தயாரிக்கும் கேத்தல்களும் புத்தளம் நகரக் கிளையின் தலைவரால் வைத்தியசாலை உயர் அதிகாரிகளிடம் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில், சமூக சேவையாளர் முஹம்மது முஜிபர், புத்தளம் வர்த்தக சங்கத் தலைவர் வை. எம். நிஸ்தார், சஹீரியன்ஸ் மிலேனியம் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் முஹம்மது பஹ்மி, சமூக நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இத்திட்டம் மனிதாபிமானத்தையும் நல்லிணக்கத்தையும் இப்பிரதேசத்தில் பலப்படுத்தும் மற்றொரு முன்மாதிரி நடவடிக்கையாக கருதப்படுகிறது.