தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.
அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான நிலையங்களில் தங்க வைத்து தேவையான உணவு மற்றும் மலசலகூட வசதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
சீரற்ற காலநிலை காரணமாக அதிக ஆபத்துள்ள வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் மனநிலை மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அவசியம் ஏற்படும் பட்சத்தில் உயர்தர பரீட்சையை மேலும் காலம் தாழ்த்த நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அலோசனை வழங்கினார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வைஸ் எயார் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன, முப்படைகளின் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, காலநிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.கருணாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.