கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியான ‘வேதாந்தி’ சேகு இஸ்ஸதீனின் மறைவானது கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என முன்னாள் முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளருமான இம்தியாஸ் பாக்கீர் மக்கார் தெரிவித்துள்ளார்.
சேகு இஸ்ஸதீன் அவர்களின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளராக, பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக இராஜாங்க அமைச்சராக கிழக்கு மாகாண சபை உறுப்பினராக பதவிகள் வகித்து மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் சமூகத்திற்கும் நாட்டிற்கும் விசேடமாக கிழக்கிற்கும் ஆற்றிய பணிகள் மகத்தானது.
அதுமட்டுமில்லாமல் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக வேண்டி தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டார். அவரிடம் கற்க வேண்டிய அநேகம் உள்ளன. சிறந்த தலைமைத்துவப் பண்புகளை கொண்டிருந்த மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் சகல சமூகங்களாலும் நன்கு மதிக்கப்பட்டவராக விளங்கினார்.
அரசியல் நீதியும் நேர்மையும், மாற்று கட்சி அரசியல்வாதிகளை மதிக்கும் நல்ல பண்புகளையும் கொண்டவராகவும் காணப்பட்ட இவரது ஆளுமை பணிகள் காலத்தால் அழியாதவை.
அதேநேரம் மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் என்னோடு மிக நெருக்கமாகவே கடைசி வரை இருந்தார். அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு அரசியல் பிரசாரத்திற்காக சென்ற சமயம் வீடு சென்று நோய் விசாரித்தேன். தனது கடைசி தருவாயிலும் கூட சமூகத்தின் எதிர்கால விமோசனம் பற்றியதாகவே இருந்தது.
நீதி,நேர்மை,தக்வா, பண்புகளை கொண்ட இவர் அரசியலோடு பொதுப்பணியிலும் விசேடமாக கலை இலக்கியப் பணியிலும் ஈடுபட்டார்.
இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளார். ஆன்மீகத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அவர் மறுமை வாழ்வுக்காக நிறையவே சம்பாதித்திருக்கிறார்.
அவரது மறைவால் ஏற்பட்ட இழப்பு நிரப்ப முடியாதது. எல்லாம் வல்ல இறைவன் அவரின் நற்பணிகளை அங்கீகரித்து, உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக என முன்னாள் அமைச்சர் தனது அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டார்.