அக்குறணை பிரதேசத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமான கட்டடங்களே முக்கிய காரணமாக உள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த இன்று (11) தெரிவித்தார்.
அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
அக்குறணையில் ஒவ்வொரு முறையும் மழைக் காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கு நீண்டகால பிரச்சினையாக உள்ளது. அக்குறணை நகரில் சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களால் வெள்ளப் பாதிப்பு ஏற்படுகின்றது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து இக்கட்டடங்களை அகற்ற தீர்மானித்ததாகவும் வெள்ளத்தை தணிப்பதற்கான முக்கிய தீர்வாக பிங்கா ஓயாவில் சேறுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நீண்ட காலமாக இப்பிரச்சினை நிலவி வருகின்ற போதிலும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒருங்கிணைந்த திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை.
இதன் விளைவாக, தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு கண்டி மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லால்காந்த மேலும் தெரிவித்தார்.