தமிழ்நாட்டிலும் பொதுவாக தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும் புகழ்பெற்ற மறைந்த நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களின் நூற்றாண்டு பூர்த்தியவதை சிறப்பிக்கும் விதமாக நாகப்பட்டிணத்தில் அமைந்துள்ள தைக்கால் தெரு மற்றும் புதிதாக அமைய உள்ள பூங்காவிற்கு ‘இசை முரசு’ நாகூர் ஹனிபா என்று பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா என்று பெயர் சூட்டியதற்கு தமிழக முதல்வரை சந்தித்து அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
நாகப்பட்டிணம் அருகே உள்ள நாகூரை சேர்ந்தவரான இஸ்மாயில் முகமது ஹனிபா திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர். மட்டுமல்லாமல், இஸ்லாமிய பக்தி பாடல்கள் பலவும், திமுகவிற்காக கொள்கை பாடல்கள் பலவும் பாடியுள்ளார்.
திமுக தலைவரும்இ முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியின் இளம் வயது தோழனுமான நாகூர் ஹனிபா, அவரது பாடல்களுக்காக ‘இசை முரசு’ என்ற பெயரை பெற்றவர். 1957 முதல் 10 ஆண்டுகளாக தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தவர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை (21) தலைமைச் செயலகத்தில், நாகூர் ஹனிபாவின் மகன்கள். நாசர் மற்றும் நவ்சாத், மகள் ஜரினா பேகம், மருமகன் சாகுல் அமீது மற்றும் அவர்களது குடும்பத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகம்மது ஷா நவாஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் .ந.கௌதமன், நாகப்பட்டினம் நகரமன்றத் தலைவர் இரா.மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.