உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கியது.
உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. 13வது சுற்று வரை இருவரும் சம புள்ளிகளில் இருந்ததால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று நடந்த 14வது சுற்றில் அற்புதமாக விளையாடிய குகேஷ் 58வது நகர்த்தலில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தினார்.
சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், இளம் உலக செஸ் சாம்பியன் ஆன முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார் சென்னையை சேர்ந்த குகேஷ்.
இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 22 வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு ரூ.11 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த டிங் லிரென் ரூ.10.13 கோடியை பெற்றார். குகேஷுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.