காசாவில் இடம்பெறும் இஸ்ரேலிய போர்க்குற்றங்கள், பலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்தல் உள்ளிட்ட விடயங்களை உடனடியாக நிறுத்துமாறு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குவைத் நாடு நடத்தும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உச்சி மாநாட்டின் 45வது அமர்வு நேற்று (01) நடைபெற்றது.
இமாநாட்டின் முடிவில் ‘குவைத் பிரகடனம்’ வெளியிடப்பட்டது.
இம்மாநாட்டின் போது பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் வளர்ந்து வரும் பங்கை தலைவர்கள் பாராட்டினர்.
மேலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சர்வதேச உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் பங்களிப்புகளை அவர்கள் முன்னிலைப்படுத்தினர்.
காசா, லெபனான் மற்றும் மேற்குக் கரைக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளையும், ஜெருசலேம் மற்றும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனித தலங்களில் அத்துமீறல்களையும் இம்மாநாட்டின்போது தலைவர்கள் கண்டித்தனர்.
மேலும் இம்மாநாட்டின் போது வளைகுடா தலைவர்கள், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நிலையான தீர்வுகளுக்கான தீவிர பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கும் அவசரத் தலையீட்டை கோரினார்கள்.
இதேவேளை லெபனானில் இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் அதே வேளையில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றங்களைப் பாதுகாப்பதற்கான கத்தாரின் மத்தியஸ்த முயற்சிகளையும் குவைத் பிரகடனம் பாராட்டியது.
கவுன்சில் லெபனானில் தற்காலிக போர்நிறுத்தத்தை ஆதரித்தது மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 இன் கீழ் பரந்த அமைதி, இஸ்ரேலிய வெளியேற்றம் மற்றும் இடம்பெயர்ந்த லெபனானியர்கள் திரும்புவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற அழுத்தமான சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் புதுமைக்கான தனது பங்களிப்பைத் தொடர வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுதியளித்தது.