செல்லுபடியான வீசா மற்றும் கடவுச் சீட்டுகளை போலீசாரிடம் சமர்ப்பிக்கத் தவறியமைக்காக கைது செய்யப்பட்ட இந்தோனேசியாவின் 8 தப்லீக் பணியாளர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச் சாட்டுகளில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
1950 களில் இலங்கையில் தப்லீக் ஜமாஅத் அறிமுகமாகியதில் இருந்து தப்லீக் பணிக்காக வெளிநாடுகளில் இருந்து பணியாளர்கள் வந்து செல்கின்றனர்.
இவர்கள் நாட்டுக்கு வந்தது முதல் திரும்பிச் செல்லும் வரை இவர்களுடைய பாஸ்போர்ட், விசா அனைத்தும் தப்லீக் மர்க்கஸான மர்கஸுல் இஸ்லாமியில் வைக்கப்படுகின்றன. இந்தப் பணியாளர்கள் பொதுவில் சுற்றுலா விசாவிலேயே நாட்டுக்குள் நுழைகின்றனர்.
இந்த அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் இருந்து 8 பேர் தப்லீக் பணிக்காக இலங்கை வந்துள்ளனர். மர்கஸுல் இஸ்லாமியில் தமது பாஸ்போர்ட், விசாக்களை ஒப்படைத்து விட்டு இவர்கள் நாட்டுக்குள் தப்லீக் பணிக்காகச் சென்றுள்ளனர்.
ஹாவா எளிய மஸ்ஜித் ராஷிதில் தமது பணியை முடித்துக் கொண்டு நுவரெலியா அல் கபீர் ஜும்மா பள்ளிவாசலில் நவம்பர் 29 ஆம் திகதி இவர்கள் தமது பணியைத் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நுவரெலியா பொலிஸார் நடத்திய விசாரணையில் இவர்களது வசம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாதிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 2 ஆம் திகதி நுவரெலிய பொலிஸார் இவர்களைக் கைது செய்தனர்.
1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் மூன்றாம் பிரிவின் 10 (அ) (ஆ) அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ள நியமங்களையும் கட்டளைகளையும் மீறி இலங்கையில் தங்கியிருந்தமையினால் தண்டனைக்குரிய குற்றமொன்றினைப் புரிந்துள்ளதாக போலீஸ் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது.
இவர்கள் மத போதனைகளில் ஈடுபட்டார்களா என்றும் ஏனைய மதங்களுக்கு அது அச்சுறுத்தலாக அமைந்ததா என்றும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
பீ 12408/24 இலக்கம் கொண்ட இந்த வழக்கின் விசாரணை முடிவில் இவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை எனக் கூறி நுவரெலியா நீதவான் பிரபுத்திக நாணயக்காரவினால் இன்று (16) விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களை அழைத்துச் செல்வதற்காக மர்கஸுல் இஸ்லாமி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் ஆஜராகியிருந்தனர்.