தூயதோர் இலங்கை எனும் கனவுடன் பயணிக்கும் newsnow இன் ஊடகப் பணிக்கு நவம்பர் 30 ஆம் திகதியுடன் ஆறு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு பலரும் தமது வாழ்த்துக்களை அனுப்பி வைக்கின்றனர். அவர்களின் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றிகள்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒய்வு பெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் அஷ்ஷைக் என்,எம், மிப்லி அனுப்பியிருந்த வாழ்த்தினை வாசகர்களுடன் பரிமாறுகின்றோம்.
இலங்கையில் முஸ்லிம் ஊடகம் ஒன்றின் தேவையும் அதன் அவசரமும் பல பேசப்பட்டு, உணரப்பட்டு வந்த போதிலும் பஹன ஊடகம் துணிச்சலாக இந்தக் கனவை இதே போன்ற ஒரு நாளில் (30.11.2018) தான் ஆறு வருடங்களுக்கு முன் யதார்த்தமாக மாற்றியது.
ஊடக அமைப்பை நிர்வகிப்பதில் உள்ள உள்ளார்ந்த சவால்கள், குறிப்பாக ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் அதனை நடாத்துவதில் உள்ள எதிரலைகளை சமாளிப்பதில் காணப்படும் தடைகளை கண்ட பலர் இந்த ஆபத்தான ஆனால் உன்னதமான பணியை மேற்கொள்வதில் தயங்கினர்.
இந்த பின்னணியில், கடந்த ஆறு வருடங்களாக எவ்வித பிரதிபலனோ உபகாரமோ இன்றி, தனி ஒரு மனிதனாக முழு நிதிச் சுமையைத் தாங்கி நிற்கும் பரோபகாரிகளும், இந்த உன்னத நோக்கத்திற்காகத் தன்னலமின்றித் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து பணிபுரியும் ஊழியர்களும் உயர்ந்த பாராட்டுக்களுக்கும் இறைகூலிக்கும் உரியவர்கள்.
நடுநிலைமை பேணும் முஸ்லீம் மீடியா என்ற எமது சமூகத்தினதும் புத்திஜீவிகளினதும் மிக நீண்ட நாள் கனவான இந்த சமூகப் பொறுப்பை, முஸ்லிம் சமூகத்தில் உள்ள பரோபகாரர்கள் மற்றும் தலைவர்கள் அங்கீகரித்து தம்மால் -இயன்றதை அல்ல- செய்ய வேண்டியதை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பஹன மீடியா தேசத்திற்கும் மனித குலத்திற்கும் சேவை செய்வதில் அர்த்தமுள்ள பயணத்தைத் தொடரும் வேளையில், நமது தளராத ஆதரவையும், நிதி, தார்மீக மற்றும் அணைத்து பங்களிப்புக்களையும் வழங்குவோம்.
முள்ளும், ரோஜாக்களும் நிறைந்த இந்த ஆறு வருட பயணத்தின் முடிவைக் குறிக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் பஹன மீடியாவிற்கும் மற்றும் அதன் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.