முஸ்லிம் எய்ட் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நிரந்தர வதிவிடங்களை கையளிக்கும் நிகழ்வுகள் மூதூர் ஹபீப் நகரில் டிசம்பர் 9ம் திகதியும், புல்மோட்டை பட்டிக்குடா கிராமத்தில் 10ம் திகதியும் எளிமையான முறையில் நிகழ்ந்தேறின.
பல வருட காலம் கரையோரக் கிராமத்திலும் எல்லைப்புற காடுகளை அண்டிய கிராமத்திலும் மண்குடிசை வீடுகளிலும் அரைகுறையான வீடுகளிலும் வாழ்ந்த மிக வறிய குடும்பங்கள் தமக்குரிய நிரந்தர வதிவிடங்களைப் பெற்றுக் கொண்டனர்.
மூதூர் கடற்கரையோரமாக, டிசம்பர் 9ம் திகதி நடைபெற்ற நிகழ்வில் விசேட அதிதியாக இலங்கைக்கான மலேசிய தூதுவர் பாட்லி ஹிசாம் ஆதம் அவர்களுடன் அவரது துணைவியாரும், கௌரவ அதிதியாக ஸ்மார்ட் சமூக செயற்திட்டத்தின் தாபகரும் முஸ்லிம் எய்ட் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகருமான டி.எல்.எம் நவாஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.
விசேட அதிதிகளாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீ லங்காவின் பணிப்பாளர் ஏ.சி. பைசர் கான் மற்றும் மூதூர் பிரதேச செயலக உதவிச் செயலாளர் செல்வி ரொஸானா அவர்களும் தென்கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஜனாப் நவாஸ் பாரூக் அவர்களும் பங்கேற்று நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
இவர்களுடன் முஸ்லிம் எய்ட் இன் சிரேஷ்ட ஊழியர்கள், கள ஊழியர்கள் மற்றும் தொண்டர் அமைப்பான தடயம் உறுப்பினர்களும் சமூக பிரமுகர்களும் பங்கேற்றனர்.
இதேவேளை 10ம் திகதி புல்மோட்டை, பட்டிக்குடா எல்லைக் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மற்றும் புனரமைப்புச் செய்யப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கௌரவ மற்றும் விசேட அதிதியாக, சிரேஷ்ட ஆலோசகர் நவாஸ் ஹாஜியார், கௌரவ அதிதியாக முஸ்லிம் எய்ட் பணிப்பாளர் பைசர் கான், கிராம சேவகர் அபுல் ஹசன், முஸ்லிம் எய்ட் சிரேஸ்ட மற்றும் கள ஊழியர்களுடன் பிரதானமாக ஸ்மார்ட் சமூக செயற்;திட்டத்தின் கிராமிய குழுச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் சமூகத் தலைவர்களும் பயனாளிகள் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
முஸ்லிம் எய்ட் ஸ்மார்ட் சமூக செயற்திட்டத்தினூடாக பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்களும் கிராம மக்களின் குடிவருகையும் அதிகரித்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.
வீடுகள் கையளிப்பினைத் தொடர்ந்து ஸ்மார்ட் சமூக செயற்திட்டம் தொடர்பில் பல்வேறு குழுக் கலந்துரையாடல்களும் சிறப்பு ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன என்பதும் ஸ்மாட் சமூக செயற்திட்டத்தினை முன்னேற்றமான நிலைக்குக் கொண்டு செல்ல அனைவரும் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.