நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த கிண்ணியா – குறிஞ்சாக்கேணி நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படடுள்ளது.
சவூதி நிதியுதவின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த அபிவிருத்தி பணிகளுக்கென திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் அப்துல் மொஹ்சென் அல் முத்லாவும் கையெழுத்திட்டனர்.
இந்த பாலம் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சுமார் 100,000 மக்களின் பயணத்தையும் வணிக நடவடிக்கைகளையும் எளிதாக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
பேராதனை பதுளை செங்கலடி வீதி அபிவிருத்தி திட்டத்திலிருந்து மீதமுள்ள நிதியை இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
1977 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப் பாலம் காலப்போக்கில் அரிப்புக்குள்ளாகி அண்மைக்காலமாக இடிந்து விழும் நிலையை அடைந்துள்ளது.
இந்தப் பாலத்தில் கடந்த 2021.11.21 ஆம் திகதியன்று ஐந்து சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ள சோக சம்பவமொன்றும் பதிவாகியிருந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த பாலத்தை நிர்மாணித்துத் தருமாறு மக்கள் தொடர்ச்சியாக கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து பாலத்தை புனர் நிர்மாணம் செய்வதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு 226. 7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும் பாலத்தின் கட்டுமான பணிகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
இந்நிலையிலேயே இந்தப்பாலத்தை சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் நிர்மாணிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.