சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான இரு தரப்பு அரசியல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் நிறைவுப்படுத்தப்படாத நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் இந்த விஜயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது 15 ஒப்பந்தங்கள் வரை நிறைவுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் யாவும் இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விடயங்களாகும்.
எனினும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் ரீதியிலான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புக்கள் உள்ளடங்கலாக இரு கட்சிகளுக்குமிடையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை விரிவுப்படுத்தும் வகையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
முன்னதாக 2015 ஆம் ஆண்டு முதல் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயலாற்றி வந்தது.
இறுதியாக 2021 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை இலங்கையில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.