பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 3 பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்

Date:

பாராளுமன்ற பெண் பணியாளர்களை  பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட பாராளுமன்ற தொடர்புத்துறை, பல கட்ட விசாரணைகளை நடத்திய பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் எனக் கண்டறிந்ததாகக் கூறியது.

அதன்படி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன, கடந்த 9ஆம் திகதி இரவு மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய ஒப்புதல் அளித்தார்.

2021 மற்றும் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்ற பெண் பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 2023 ஜூலை 30 மற்றும் ஓகஸ்ட் 02ஆம் திகதிகளில் பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அப்போதைய சபாநாயகரின் அறிவுறுத்தலுக்கு அமைய இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பாராளுமன்றத்தின் அப்போதைய நிர்வாகப் பணிப்பாளர் தலைமையில் மூவர் அடங்கிய உள்ளக விசாரணைக் குழுவை பாராளுமன்ற செயலாளர் நாயகம் 2023.08.04ஆம் திகதி  நியமித்திருந்தார்.

இந்தக் குழு முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய பாராளுமன்ற பணியாளர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததுடன், குழுவின் அறிக்கை 2023.08.23ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலதிக அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக குறித்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இது தொடர்பான விசாரணை பொலிஸ்மா அதிபரின் ஊடாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தப் பொலிஸ் பிரிவின் விசாரணைக்கு அமைய மற்றுமொரு பாராளுமன்ற பணியாளர் கைது செய்யப்பட்டு 2024.01.30ஆம் திகதி குறித்த பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு அமைய இது தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என குற்றஞ்சாட்டப்பட்ட பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் ஒழுக்காற்று விசாரணையை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டார்.

இந்த ஒழுக்காற்று விசாரணையின் இறுதி அறிக்கை 2024.12.23ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஹானி ரோஹணதீரவிடம் கையளிக்கப்பட்டதுடன், இதனை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மூவரும் இடை நீக்கம் செய்யப்பட்ட தினத்திலிருந்து பணி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் விடுத்த பரிந்துரைக்கு அமைய இவர்களைப் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...