புத்தளத்தின் அடையாளமாக திகழ்ந்த மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம்: இரங்கல் செய்தியில் இல்ஹாம் மரைக்கார்

Date:

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவ்வுலகை விட்டும் பிரிந்த அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தொடர்பில் புத்தளம் சமூகம் குறிப்பாகவும் முஸ்லிம் சமூகம் பொதுவாகவும் அறிந்திருக்க வேண்டும் என்ற வகையில் இக் கட்டுரையினை எழுதுகின்றேன்.

1954 ஆம் ஆண்டு புத்தளத்தில் பிறந்த அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் புத்தளத்தில் பல்துறையாளர்களின் வரிசையில் முதன்மையானவராக குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகும்.

புத்தளத்தின் சகல நிகழ்வுகளிலும் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் பிரசன்னத்தை காணலாம். அந்த அளவுக்கு புத்தளம் சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பினையும், நம்பிக்கையினையும் கொண்ட ஒருவராக அவர் அடையாளம் காணப்பட்டிருந்தமையே இதற்கான காரணமாகும்.

சில நாட்கள் சுகயீனமுற்ற நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 70 வது வயதில் அன்னாரது உயிர் பிரிந்தது.(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்).

அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் வாழ் நாள் முழுவதுமாக ஆன்மீகத்தின் அடிப்படையில் அமைந்திருந்தமையானது, சமூக ரீதியான பிரச்சினைகளின் போது நீதியான தீர்ப்பினை கூறும் ஒருவராக அவரின் செயற்பாடு காணப்பட்டதால் புத்தளம் மட்டுமல்லாமல் அதனை சூழவுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் மர்ஹூம் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களை நாடி வந்த சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்துள்ளதை புத்தளத்தை சார்ந்த ஒருவன் என்ற வகையில் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும்.

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லுரியானது இலங்கையின் அரபுக் கல்லுரிகளின் வரலாற்றில் முதன்மையானதாகும். அரபுக் கல்லூரி என்பதற்கு அப்பால் பொது அறிவுடன் கூடிய கல்விக் கூடமாக காசிமிய்யாவை உருவாக்குவதில் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியதாகும்.

இது மட்டுமல்லாமல் கல்விமான்களை அணுகி காசிமிய்யாவின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளையும் அவ்வப்போது பெற்றுக் கொள்ளும் அவரது முயற்சி காசிமிய்யாவின் மீது அளப்பற்ற பற்று கொண்டவராக அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் செயற்பட்டு வந்தமையானது இக்கல்லூரி மாணவர்களுக்கு கிடைத்த ஒரு அருளாக குறிப்பிடலாம்.

சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது சர்வமத அமைப்பில் இருந்து கொண்டு அதனை பற்றி எரிய விடாமல் அணையச் செய்து, மிகவும் பக்குவத்துடன் கையாளுகின்ற ஆளுமையினை இறைவன் அவருக்கு கொடுத்ததினால் புத்தளம் பல சந்தர்ப்பங்களில் பாதுகாக்கப்பட்டதை எதிர்கால சமூகம் தெரிந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.

அதே போல் விளையாட்டு , கல்வி, பாடசாலைகளின் அபிவிருத்திகள்,மற்றும் பொது விடயங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளை சந்திப்பதிலும், அபிவிருத்திகளை புத்தளம் நன்மை கருதி பெறுவதிலும் அவ்விடத்திற்கு பிரசன்னமாகி தமது அமைதியான பேச்சாற்றலினால் அதனை அடைந்து கொள்ளும் பக்குவத்தை கொண்டவராக மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் இருந்துள்ளார்.

இந்த நிலையில் புத்தளம் சமூகத்திற்கான அவரது அளப்பறிய பணிகளானது எதிர்கால புத்தளம் வரலாற்றுப் பதிவில் அழிக்க முடியாததொன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அவரது கடந்த கால சமூகப் பணிகள் மாணவர்கள் மத்தியில் நினைவு கூறப்படவேண்டியது என்பதையும் பதிவிட விரும்புகின்றேன்.

புத்தளம் சமூகத்திற்கு மர்ஹூம் அப்துல்லா ஆலிம் அவர்கள் ஆற்றிய பணி என்றும் போற்றப்பட வேண்டியதொன்று என்பதுடன், அன்னாரது மறுமை வாழ்வுக்காக நாம் பிரார்த்தனை செய்வதானது இன்றியமையாததொன்று என்பதையும் பதிவிட்டு அன்னாரது பிரிவால் துன்பமடைந்துள்ள குடும்பத்தினர்களுக்கு இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

இல்ஹாம் மரைக்கார்
சமூக செயற்பாட்டாளர், முகாமைத்துவ பணிப்பாளர் .
அமேசன் கெம்பஸ் மற்றும் அமேசன் கல்லூரி

 

 

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...