இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு மத்தியிலான போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் பரிமாற்றம் ஆகிய ஒப்பந்தங்கள், கத்தார் நாட்டின் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி எதிர்வரும் 19ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஹமாஸிடம் இருந்து பணயக் கைதிகளை மீட்க இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பலஸ்தீனர்களை முதற்கட்டமாக விடுவிப்பதில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு உடன்பாடில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்த காசாவிலுள்ள பலஸ்தீனர்கள் மற்றும் உலகளவிலுள்ள அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,நேற்று (15) இஸ்ரேல் காஸாவின் மீதான அதன் தாக்குதலை மீண்டும் தொடர்ந்தது. வடக்கு காசா பகுதி, ஷெயிக் ரட்வான் குடியிருப்புப் பகுதி, மத்திய காசா ஆகிய இடங்களில் இஸ்ரேல் நடத்திய தரைவழி, வான்வழி மற்றும் டிரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 65 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.