இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் தர்மசக்தி அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த தைப்பொங்கல் தினக் கொண்டாட்டம் மற்றும் தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவம் குறித்த சர்வமத உரையாடல் இன்றையதினம் (15) கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் கல்யாண முருகன் மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக தைப்பொங்கல் தின பூஜை வழிபாடுகளை சிவ ஸ்ரீ சிவ தர்சன சர்மா குருக்கள் நடத்தியதுடன் பொங்கல் வைக்கப்பட்டு, மத சடங்குகள் அனைத்து மதத் தலைவர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
தைப் பொங்கல் பண்டிகை என்பது உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும்,மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு பண்டிகையாகும்.
இந்த நிகழ்வு அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கலாநிதி மாதம்பகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர், தர்மசக்தி அமைப்பின் பொதுச் செயலாளர் அனுர பெரேரா, தர்மசக்தி அமைப்பின் பொருளாளர் அஷ்ஷேக் பிர்தௌஸ் மன்பயி மௌலவி, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, பௌத்த மத பிக்குகள், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட மகா சங்கத்தினரின் முழுமையான பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வு மதங்களுக்கிடையேயான புரிதலை மேம்படுத்தவும், சகவாழ்வை வலுப்படுத்தவும் மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்ததுடன் தைப்பொங்கல் மட்டுமன்றி, ஒற்றுமை, அமைதி, மற்றும் சகோதரத்துவத்தை கொண்டாடிய நிகழ்வாகவும் அமைந்தது. இலங்கை சமூகத்தின் மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தமை விசேட அம்சமாகும்.