– காலித் ரிஸ்வான்
2025 பெப்ரவரி 22 அன்று, சவூதி அரேபியா அந்நாட்டு நிறுவன தினத்தை (Founding Day) கொண்டாடுகிறது.
1727 ஆம் ஆண்டு இமாம் முஹம்மத் பின் சஊத் முதல் சவூதி அரசை நிறுவி 298 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இது கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் சவூதி அரேபியாவின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் வளர்ச்சிக்கான அதிநவீன தலைமைத்துவத்தை போற்றும் முக்கியமான நிகழ்வாகும்.
18ஆம் நூற்றாண்டில், அரேபிய தீபகற்பம் பல்வேறு குடிகள் மற்றும் மன்னர்களால் துண்டாடப்பட்ட நிலையில் இருந்தது. இதனை 1727ஆம் ஆண்டு, இமாம் முஹம்மத் பின் சஊத், திரியா பிரதேசத்தில் (Diriyah) முதல் சவூதி அரசை உருவாக்கி, நல்லாட்சி, நீதித்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் அடிப்படையில் மக்கள் ஒருங்கிணைந்த ஒரு புதிய இராச்சியத்தை உருவாக்கினார்.
இதன் பின்னர் 1932 ஆம் ஆண்டு மன்னர் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் தலைமையில் ஒருங்கிணைந்த சவூதி அரேபிய இராச்சியத்தின் உருவாக்கத்திற்குத் தளம் அமைத்தது.
சவூதி தேசிய தினம் (செப்டம்பர் 23) ஒருங்கிணைந்த சவூதி அரசின் அறிவிப்பை கொண்டாடுகின்றது, அதேபோல் இந்த நிறுவனர் தினம் (பெப்ரவரி 22) சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டுப் பெருமையையும் முன்னிறுத்துகிறது. 2022ஆம் ஆண்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் இந்த நாளை அரச விடுமுறையாக அறிவித்தார்.
இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான கொண்டாட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரியக் கதைப்பொழிவுகள் மற்றும் ரியாத், ஜித்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாரம்பரிய அணிவகுப்புகள் மற்றும் வானவேடிக்கைகள் மற்றும் முன்னணி சவூதி குடிமக்களுக்கு சிறப்பு கௌரவித்தல் போன்ற அம்சங்கள் இடம்பெறவுள்ளன
இந்த சிறப்பு நாளை கொண்டாடும் முகமாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் கொழும்பில் ஒரு விசேஷ விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.
இலங்கை – சவூதி அரேபியாவின் 50 ஆண்டு நட்புறவு
இந்த ஆண்டு நிறுவனர் தினம்மிகவும் முக்கியமானதாக அமைகிறது, ஏனெனில் சவூதி அரேபியா – இலங்கை இருநாட்டு ராஜதந்திர உறவுகள் 50வது ஆண்டை கடந்து வருகின்றன. 1974 இல் தொடங்கிய இந்த உறவு, வணிகம், வேலைவாய்ப்பு மற்றும் பண்பாட்டு பரிமாற்றம்போன்ற பல்வேறு துறைகளில் வலுவாக வளர்ந்துள்ளது.
இந்த 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஒரு இலச்சினை (logo), 2025 பிப்ரவரி 5 அன்று ரியாத் நகரில் நடைபெற்ற விழாவில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் மற்றும் சவூதி துணை அமைச்சர் அப்துல்மஜீத் அல்-ஷம்மாரி தலைமையில் வெளியிடப்பட்டது.
அந்நிகழ்வில், இலங்கையும் அரேபிய நாடுகளும் 7ஆம் நூற்றாண்டிலேயே தொடர்பு கொண்டிருந்ததாக, மூன்றாம் அக்போதி அரசர் மதீனா நகரில் இருந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு தூதர் அனுப்பிய வரலாற்று சம்பவம் சுட்டிக்காட்டப்பட்டது.