கொவிட் தொற்று காலப்பகுதியில் மரணித்த இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, சர்வதேச விதிமுறைகளையும் மீறி எரித்ததனால் முஸ்லிம் சமூகத்தின் உரிமை பாதிக்கப்பட்டமை தொடர்பில் அதற்கான நீதி கோரி இன்று வரை குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இது வரையில் குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் , சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்குமான கவன ஈர்ப்பின் அவசியம் உணரப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் சிவில் சமூகத்தினராலும் உரிமைச் செயற்பாட்டாளர்களாலும் பிரதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொடரில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பலஸ்தீனியர்களுக்காக சர்வதேச குத்ஸ் தினமான எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் பலஸ்தீன் தொடர்பான குத்பாப் பிரசாங்கத்தைத் தொடர்ந்து பலவந்த ஜனாஸா எரிப்பு விவகாரமும் சேர்த்துக்கொள்ளப்பட்டு துஆப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், இம்முறை இடம்பெறவிருக்கும் புத்தளம் ஸாஹிறா மைதான பெருநாள் குத்பாவைத் தொடர்ந்து, ஜனாஸா எரிப்பினால் பாதிப்படைந்த முஸ்லிம் சமூகத்தின் மனத்துயரங்களை எமது பிரதேசத்தில் பணியாற்றும் பல்வேறு தலைமைகளுக்கும் எத்திவைத்து அதனூடாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
புத்தளம் சர்வமத அமைப்பு, புத்தளம் பெரியபள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் நகரக்கிளை என்பன சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றன.