இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அல்ஜஸீரா நடத்திய நேர்காணல் தனக்கு திருப்தியாக இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அல்ஜஸீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘Head to Head’ நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மெஹ்தி ஹசனுடன் நடந்த நேர்காணல் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் உள்ளூர் ஊடகங்களுடன் பேசும் போது அது முழுமையாவோ அல்லது நேரடியாகவோ ஒளிபரப்பப்படுகிறது. எனவே நல்லது கெட்டது என இரண்டுமே வெளியாகும்.
அல்ஜஸீரா என்னை 2 மணித்தியாலயங்கள் நேர்காணல் செய்து 1 மணி நேர வீடியோவொன்றை மட்டுமே வெளியிட்டது. அதிலிருந்த பெரும்பகுதி திரிபுபடுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
தொகுப்பாளர் மெஹ்தி ஹஸனுடன் இணைந்துகொண்ட 3 குழு உறுப்பினர்களில் இருவர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.
நேர்காணல் ஒளிபரப்பான சிறிது நேரத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மனித உரிமை வழக்கறிஞரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அம்பிகா சற்குணநாதன் இந்த விவாதத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவருக்கு பதிலாக விடுதலைப்புலிகள் ஆதரவு குழுக்களுடன் தொடர்பு கொண்ட இருவர் நியமிக்கப்பட்டிருந்தார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.