சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் வழங்கப்பட்ட மேலதிக பணத்தை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் செலவிடாமல் திருப்பி வழங்கியுள்ளார்.
தனது வெளிநாட்டுப் பயணத்தின் பின்னர் ஏற்பட்ட கூடுதல் செலவுகளுக்காக வழங்கப்பட்ட பணத்தை இவ்வாறு ஒப்படைத்துள்ளார்.
அதற்கமைய அவர் 240 அமெரிக்க டொலர்களை அமைச்சின் பொருளாளரிடம் ஒப்படைத்துள்ளார். அது தொடர்பான ரசீது அதன் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW)” 90 வது அமர்வு நடைபெற்றது.
இந்த அமர்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டார்.
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக மேலதிக செலவுகளுக்காக ஒரு நாளைக்கு 40 அமெரிக்க டொலர்கள் படி 6 நாட்களுக்கு வழங்கப்பட்ட 240 அமெரிக்க டொலர்களை அரசாங்கத்திற்கு திருப்பி கொடுத்துள்ளார்.இலங்கை நாணயத்தின் பெறுமதி அது 69,960 ரூபாவாகும்.
பணத்தை திருப்பிக் கொடுத்தமைக்கான பற்றுச்சீட்டை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆடம்பரமாக செலவு செய்ய பெருந்தொகை பணத்தை அரசியல்வாதிகள் கோரும் நிலையில், கொடுக்கப்பட்ட சிறிய பணத்தையும் மீதப்படுத்திய அமைச்சரின் செயற்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.