சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர் ஹாபிஸ் அல் அசாத் நிர்வாகத்தில் உளவுப்பிரிவின் தலைவராக இருந்த ஹுவைஜா என்பவர் சிரியாவின் தற்போதைய அரசின் இராணுவப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹுவைஜா என்ற இந்த நபர் ஹாபிஸ் அல் அசாத் காலத்தில் பிரபலமான பல படுகொலைகளோடு சம்பந்தப்பட்டவராக கருதப்படுவதோடு பல முக்கியமான பல அரசியல் தலைவர்களின் படுகொலைகளை செய்தவராக இவர் கருதப்படுகிறார்.
ஹாபிஸ் அல் அசாத்துடைய ஆட்சிக் காலத்திலும் பஷார் அல் ஆசாத்துடைய ஆட்சிக் காலத்திலும் இராணுவத்திலும் பொலிஸிலும் கடமையாற்றிய பலர் தற்போதைய அரசாங்கத்திற்கு இடையூறாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதன் காரணமாக அவர்களை கட்டுப்படுத்தும் வகையிலும் அவர்களுடைய தீய செயற்பாடுகளிலிருந்து நாட்டை காப்பாற்றும் வகையிலும் முழு அளவிலான பாதுகாப்பான ஏற்பாடுகளை தற்போதைய சிரியாவின் அரசாங்கம் செய்து வருகின்றது.
அவர்களுடைய செல்வாக்குமிக்க பல பிரதேசங்களில் முன்னைய ஆட்சிக்காலத்தில் செயற்பட்டு வந்த இராணுவத் தலைவர்களையும் ஏனையோர்களையும் தேடி கைது செய்கின்ற ஒரு முயற்சி மக்களுடைய ஆதரவுடன் தற்போதைய இராணுவத்தின் ஒத்துழைப்போடும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதை சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பஷர் அல்-அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததிலிருந்து, முன்னாள் ஆட்சி விசுவாசிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக இராணுவ அதிகாரிகள் நல்லிணக்க மையங்களைத் திறந்துள்ளனர். இருப்பினும், சில பிரிவுகள் இணங்க மறுத்துவிட்டன, இது பல மோதல்களுக்கு வழிவகுத்தது.
சிரியாவின் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகத் தலைவராக இருந்த பஷார் அல்-அசாத், டிசம்பர் 8 ஆம் தேதி ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றார், இதன் மூலம் 1963 முதல் ஆட்சியில் இருந்த பாத் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.