இஸ்லாமிய அறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள் இன்று (25) காலமானார்.
இறை அழைப்பாளர், இலட்சியப் போராளி, ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், பன்னூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், தேர்ந்த நிர்வாகி, இஸ்லாமிய இயக்கத் தலைவர் என்று பன்முக ஆற்றல் பெற்றவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோருக்கும் நண்பர் பழகுவதற்கு இனியவர் முந்தைய தலைமுறையின் இஸ்லாமிய இயக்கத் தலைவர்.
வேலூர் இஸ்லாமிக் சென்டரின் முதல்வராக, நிர்வாகியாக திறம்படச் செயலாற்றியவர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வேலூர் நகரத் தலைவராக, முந்தைய வட ஆற்காடு மாவட்டத் தலைவராக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினராக, மாநிலச் செயலாளராக பல்வேறு தளங்களில் இடைவிடாமல் இயங்கியவர்.
அவருடைய குடும்பமே இலட்சியக் குடும்பமாக இருக்கின்றது. மகனார் அப்துல் ஹை தாஹா வேலூர் கிளைத் தலைவர். பேரனார் ரைஹான் அகீல் சென்னை மாநகர எஸ்ஐஓ தலைவர். மருமகனார் சிராஜுல் ஹசன் முப்பதாண்டுகளுக்கு மேலாக சமரசம் இதழின் ஆசிரியர்.