இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 வயதான மொஹமட் ருஷ்தியின் தாய் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
‘எனது மகனை தடுத்து வைத்தது தவறு என நாம் உறுதியாக நம்புகிறோம். மேலும் அவர் மீது அதிகாரிகள் பொய் வழக்குகளை பதிவுசெய்ய முயற்சிப்பார்கள் என அச்சம் அதிகரித்து வருகிறது. அவரது சூழ்நிலை எங்கள் குடும்பத்திற்கு மிகவும் கவலை அளிக்கிறது அவரை உடனடியாக விடுவிக்க மனித உரிமை ஆணைக்குழு தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என ருஷ்தியின் தாய் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் திகதி கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ருஷ்தி 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவில் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் (PTA) இவரை தடுத்து வைப்பதற்கான உத்தரவில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநயக்க கையொப்பமிட்டுள்ளார்.
ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதும் ”ஏதோ ஒரு வகையில் பயங்கரவாத செயலை செய்ய திட்டமிடும் நபர் என்ற நியாயமான சந்தேகத்தின் பேரில்” கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பின்னர் தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை உலமா சபை உறுப்பினர்களின் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதாகவும் ருஷ்தி முஸ்லிம் நிலையை தாண்டிய நிலையில் இருப்பதாகவும் அவருக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும் எனவும் சபையினர் அறிவித்ததாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்திருந்தார்.
பொலிஸாரின் அறிக்கையை உறுதிப்படுத்தாத அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ருஷ்தி கைதுசெய்யபட்டதை கருத்து சுதத்திரத்தை மீறும் செயல் என கண்டித்திருந்தது.