இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்த ஆண்டுக்கான முதற் தொகுதி ஹஜ் யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவிற்குப் பயணமாகினர்.
பங்களாதேஸிலிருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்ரீகர்கள் ஜெட்டாவிலுள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.
ஜெட்டா விமான நிலையத்தில் சவூதி அரேபியாவில் உள்ள பங்களாதேஷ் தூதர் முகமட் டெல்வார் ஹொசைன், சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆலோசகர் மஸன் ஜவஹர், ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் இயக்குனர் சல்மான் அல் பெலாபி, மற்றும் பிற அமைச்சக அதிகாரிகள் யாத்ரீகர்களை வரவேற்றனர்.
இதேவேளை இந்தியாவிலிருந்தும் முதல் ஹஜ் குழு மதீனா சென்றடைந்தது. மதீனா விமான நிலையத்தில் இந்திய யாத்ரீகர்களின் முதல் குழுவிற்கு சவூதிக்கான இந்திய தூதுவர் டாக்டர் சுஹேல் கான் மற்றும் தூதர் ஜெனரல் ஃபஹத் சூரி ஆகியோர் அன்பான வரவேற்பு அளித்தனர்.
அவர்களுடன் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா துணை அமைச்சர் பேராசிரியர் அப்துல் அஜிஸ் ஏ. வஸ்ஸான் மற்றும் மூத்த சவூதி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு இந்தியாவில் 1,22,518 யாத்ரீகர்கள் புனித யாத்திரைக்காக புறப்படுவார்கள். முதல் ஹஜ் விமானங்களில் லக்னோவிலிருந்து 288 யாத்ரீகர்களும் ஹைதராபாத்திலிருந்து 262 யாத்ரீகர்களும் புறப்பட்டனர்.
அதேநேரம் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திலிருந்து 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஹஜ் குழு மதீனாவுக்குப் புறப்பட்டது.
இந்த ஆண்டு, சுமார் 89,000 பாகிஸ்தானியர்கள் ஹஜ் செய்வார்கள், மேலும் 23,620 பேர் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.