மாலைத்தீவு நாட்டில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா நாடான மாலைத்தீவில் இஸ்ரேல் நாட்டின் கடவுச்சீட்டுகளின் மூலம் அந்நாட்டினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாலைத்தீவின் குடிவரவுச் சட்டத்தில் மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்டு அதன்மூலம் இந்தத் தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாலைத்தீவு ஜனாதிபதியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குடிவரவுச் சட்டத்தின் மூன்றாவது திருத்தத்திற்கு ஜனாதிபதி முஹம்மது மூயிஸ் ஒப்புதலளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் மாலைத்தீவின் எல்லைக்குள் நுழைய முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
மாலைத்தீவு அரசின் இந்த உத்தரவானது காசா மீதான இஸ்ரேலின் போரில் பலஸ்தீனர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் பலஸ்தீன மக்களின் உரிமைகள் முறையாக வழங்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி, கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு 1967-க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பலஸ்தீன அரசை நிறுவுவதற்கு மாலைத்தீவின் கொள்கை ரீதியான ஆதரவை ஜனாதிபதி மூயிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.