நாட்டில் தற்போது நிலவும் வானிலையில் இடை அயன ஒருங்கல் மண்டலமானது (வட அரைக்கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வரும் காற்று சங்கமிக்கும் மண்டலம்) தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்றையதினம் (29) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.