சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நடைபெறும் இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சித்தலைவர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் எதிர்வரும் மே 29 முதல் 31, 2025 வரை இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்தவிருக்கும் இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
இஸ்ரேலிய அரசு காசாவில் இரண்டு வருடங்களாக போர் நிறுத்த விதிமுறைகளை மீறி, அப்பாவி பொதுமக்களை கொன்று வருகிறது.
193 நாடுகளின் எதிர்ப்பை மீறி இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத யுத்தத்தினால் குழந்தைகளும்,பெண்களும் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் இஸ்ரேலிய திரைப்பட விழாவை நடத்துவது, இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாகவே கருதப்படும்.
இது, பலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடாகவும், மனிதநேயத்திற்கு எதிரான செயலாகவும் அமையும். தமிழ்நாடு, வரலாற்று ரீதியாகவே அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளையும் ஆதரித்து வந்துள்ளது.
இந்த விழாவை அனுமதிப்பது, தமிழ்நாட்டின் இந்த மாண்புமிக்க பாரம்பரியத்திற்கு மாறான செயலாக இருக்கும். மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உலக நாடுகள் மற்றும் மக்களுக்கு உள்ளது.
பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும், இஸ்ரேலின் அநீதியான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது நமது தார்மீக கடமையாகும்.
இவ்விழா நடைபெறுமேயானால், மே 29 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியை முற்றுகையிட்டு ஆர்ப்பரிப்போம் எனவும் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.