உறுப்பினர்களை நியமிப்பதற்காக 161 உள்ளூராட்சி சபைகளுக்கு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதனை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ள 178 உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், பின்னர் வெளியிடப்படும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை பெருமளவான கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் 02ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளின் புதிய நிர்வாகம் கூடவுள்ளது. இந்நிலையில் அதனால் தேர்தல் ஆணைக்குழு பெரும் சவாலை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க, இதுவரை கிடைத்துள்ள 161 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கான பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கிடைக்கும் பெயர் விபரங்களை அவ்வப்போது வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூராட்சி சபை தேர்தல் சட்டத்திற்கு இணங்க அனைத்து உள்ளூராட்சி சபைகளும் எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்பதாக ஆட்சியமைக்க வேண்டும்.
அந்த வகையில் தமது உறுப்பினர்களின் பெயர்களை தேர்ந்தெடுப்பதில் சில கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
பெயர் விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதற்கான தாமதத்திற்கு அதுவே காரணம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.