காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு மத்தியில் அங்கு போசணை குறைபாடு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
போர் தொடரும் சூழலை அதனை முடிவுக்குக் கொண்டு வரும்படி இஸ்ரேலுக்குள்ளும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பில் இஸ்ரேல் ரிசர்வ் படையினரும் அரசுக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.
காசாவில் இரண்டு மாதங்களாக நீடித்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த மார்ச் 02 ஆம் திகதி தொடக்கம் காசாவுக்கான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் முடக்கி வருகிறது.
இந்த முற்றுகை 60 நாட்களை கடந்திருக்கும் சூழலில் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் போசணை குறைபாடு தொடர்பாக சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 80 வீதம் அதிகரித்திருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் ஆறு மாதம் தொடக்கம் இரண்டு வயது வரையான குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களில் 92 வீதமானவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச போசணை கிடைப்பதில்லை என்றும் காசா மக்கள் தொகையில் 65 வீதமானவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவுக்கு உணவு, மருந்து மற்றும் அடிப்படைத் தேவைகள் செல்வது அனுமதிக்கப்படாத சூழலில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருப்பதோடு அங்கு எஞ்சியுள்ள உணவு மற்றும் மருந்து பொருட்கள் தீர்ந்து வருவதாகவும் தொண்டு அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
இஸ்ரேல் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் செல்வதை தடுத்து வருகின்றபோதும் அவைகளை வழங்குவதற்கு தயாரான நிலையில் இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது. காசா எல்லையில் உதவிகளுடன் 3,000 டிரக் வண்டிகள் காத்திருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
முற்றுகைக்கு மத்தியில் இஸ்ரேல் காசா மீது நடத்தும் உக்கிர தாக்குதல்களில் நேற்றும் (01) பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கான் யூனிஸின் கிழக்கு பகுதியில் தமது பயிர் நிலத்திற்கு செல்லும் மூவர் இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக பார்த்தவர்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. காசாவில் உணவுப் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் இவர்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட முயன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.