காசா பகுதிக்குள் சுமார் 100 மனிதாபிமான உதவிகளைக் கொண்ட லாரிகள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லார்க் இந்த தகவலை வெளியிட்டார்.
“இது, நேற்று நுழைய அனுமதிக்கப்பட்ட ஒன்பது லாரிகளுடன் ஒப்பிடுகையில், மிகப்பெரிய முன்னேற்றமாகும்,” என அவர் தெரிவித்தார்.
இந்த லாரிகளில் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் சத்தான உலர் உணவுகள் அடங்கியுள்ளன என்றும், அவை அடுத்த கட்டமாக சேகரிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள அமைப்புகள் வழியாக காசா மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த முன்னேற்றம், தொடர்ந்த மனிதாபிமான நெருக்கடிக்குள்ளாகியுள்ள காசா மக்களுக்கு தற்காலிக நிம்மதியாக அமையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
முன்னதாக காசாவுக்கு தினமும் 500 லாரிகளின் மனிதாபிமான அடிப்படையில் பொருட்கள் காசாவுக்குள் சென்றன. ஆனால் இப்போது லாரிகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தள்ளது.
இதனால் காசா மக்கள் உதவிகள் இன்றி தவித்து வருகின்றனர். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பசி, பட்டினியால் வாடுகின்றன. சிகிச்சைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன.
இதுபற்றி காசாவில் வசிக்கும் மக்கள் கூறுகையில், ‛‛எங்கள் குழந்தைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு துண்டு ரொட்டி கூட கிடைக்கவில்லை. அரிசி, மாவு, காய்கறிகள் என்று எந்த உணவு பொருட்களும் எங்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது” என்றார்.