சரணடைந்த 600 பொலிஸாரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்த 35 ஆவது நினைவு அனுஷ்டிப்பு

Date:

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஷ்டிக்கும் நிகழ்வு நேற்று (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் அதிகாரிகளையும் சரணடையுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொலிஸார் சரணடைய மறுத்த நிலையில் 250 க்கு மேற்பட்ட விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி பொலிஸாரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.

அதனை அடுத்து விடுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உத்தரவின் பேரில் 899 பொலிஸார் சரணடைந்தனர். அவர்களில் தப்பிச் சென்றவர்கள் போக ஏனையவர்களில் 600 முதல் 774 பேர் வரை திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ் குளம் காட்டுப் பகுதிக்கு கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்ட நிலையில் வரிசையாய் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ,பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, பொலீஸ் நிலையங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகளும் இந்தச் சம்பவத்தின் போது கொல்லப்பட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பிரதி அமைச்சர் பதவி வழங்கி கௌரவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையிலேயே இது நடத்தப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியிடப்பட்டன.

1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இந்த 600 காவல்துறை அதிகாரிகளின் நினைவாக நேற்றைய தினம் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும் கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களில் உள்ள சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் இதன் போது முன்னெடுக்கப்பட்டன.

இது தவிர நிகழ்வின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவினால் பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Popular

More like this
Related

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...