அரசாங்கம், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தாக்கல் செய்திருந்த மனு எதிர்வரும் 06 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இது குறித்த தீர்ப்பை நேற்று உயர் நீதிமன்றம் வெளியிட்டது. இந்த மனு, நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
உத்தேச சட்டமூலம் மின்சார சபையை தனியார்மயமாக்க முன்மொழிவதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு நட்ட ஈடு வழங்கி அவர்களின் சேவையை நிறைவு செய்வது தொடர்பில், தெளிவான விடயம் எதுவும் மேற்படி சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதையும் அந்த மனு குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளது.
இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமையை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேற்படி சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமானால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்..