இலங்கையில் சபாத் ஹவுஸ்களை நிறுவியுள்ளமை தொடர்பில் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கேள்வி!

Date:

உள்நாட்டுப் பாதுகாப்புக் கரிசனைகள் மற்றும் சபாத் ஹவுஸ்களின் செயல்பாடுகள் தொடர்பான அண்மைக்கால கலந்துரையாடலைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் சபாத் ஹவுஸ்களை நிறுவியுள்ளமை தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு கடைபிடித்துள்ள கொள்கை தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் வினவப்பட்டது.

இலங்கையில் இயங்கும் 5 சபாத் ஹவுஸ்களில் 2 சபாத் ஹவுஸ்கள் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இதற்குப் பதிலளித்த வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் செலவுத் திறன் குறித்து இங்கு வினவப்பட்டதுடன், செலவுத் திறனை பொதுவாகக் கணக்கிட முடியும் என்றாலும், சுற்றுலாப் பயணிகளின் தேசிய இனங்களின் அடிப்படையில் அதனைக் கணக்கிடுவதற்கு எந்த வழிமுறையும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், ஒரு சராசரி இஸ்ரேலிய சுற்றுலா பயணி அண்ணளவாக 150 அமெரிக்க டொலர்களை செலவிடுவதாகவும், இது ஒப்பீட்டளவில் அதிகளவானது என அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கமைய, இது தொடர்பில் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பரிந்துரை வழங்கினார். அத்துடன், சைப்ரஸில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து சமூகப் பாதுகாப்பு நிதியத்துக்காக கழிக்கப்படுள்ள பணம் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, குறித்த பணத்தை தொழிலாளர்களுக்கு மீளப்பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராஜதந்திர மட்ட கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், விருத்தியடைந்துவரும் நெருக்கடிகளிலிருந்து ஏற்படும் எந்தவொரு சாத்தியமான இடர்களுக்கும் வினைத்திறனாக முகங்கொடுப்பதற்கான நாட்டின் தயார்நிலை குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, மத்திய கிழக்கில் உருவாகி வரும் நெருக்கடி நிலைமை மற்றும் ஏற்படக்கூடிய நெருக்கடி சூழ்நிலையை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து குழுவில் ஆராயப்பட்டது.

மேலும், வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயலாற்றுகை அறிக்கைகள் 3 தொடர்பிலும் குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை என்பன குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...