காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது பற்றியும் நிவாரண உதவி வழங்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக துருக்கிய உளவுத்துறைத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை (29) ஹமாஸ் குழுவைச் சந்தித்ததாக துருக்கிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக அனடோலு செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கிய தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் இப்ராஹிம் கலின், பலஸ்தீன ஹமாஸ் குழுவின் தலைமைக் குழுவின் தலைவரான முஹம்மது தர்விஷ் தலைமையிலான குழுவைச் சந்தித்ததாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.
காசாவில் மனிதாபிமான துயரம் குறித்தே சந்திப்பின் போது முதலில் விவாதிக்கப்பட்டது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
காசாவில் மனிதாபிமான துயரத்தையும் அழிவுகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் , நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் சர்வதேச சமூகத்துடன் துர்கியே மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் இந்த சந்திப்பில் உரையாடப்பட்டது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பலஸ்தீன குழுக்களிடையே ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.