முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிகளான ஹேமச்சந்திர பெரேரா மற்றும் பிரபாத் துமிந்த வீரரத்ன ஆகிய இருவரும் இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 314 மற்றும் 32 இன் கீழ் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலக்கம் 3 இல் கௌரவ நீதிபதி பசன் அமரசிங்க முன்னிலையில் நடைபெற்ற வழக்கில் (வழக்கு இலக்கம் 4690/03/2008) இன்று (31) தீர்ப்பு வழங்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும், அரச புலனாய்வு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகின்ற “வெள்ளை வேன்” தாக்குதல் சம்பவத்தில், இருவரும் ஊடகவியலாளர்கள் மற்றும் தூதரக ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் 2017இல் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 2023இல் இந்த வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
முக்கியமான சட்ட மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய சாட்சியங்களை முன்வைத்து சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் மற்றும் சட்டத்தரணி எம் கே எம் பர்சான் ஆகியோர் புலனாய்வு உத்தியோகத்தர்கள் சார்பாக வலுவான வாதங்களை முன்வைத்தனர்.
சந்தேகநபர்கள் ஊடகங்களில் காட்டப்பட்டதன் பின்னர் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டமையையும் , 1வது சாட்சி ஒருவர் பொது மக்களில் சிலரை சந்தேகநபர்களாக அடையாளம் காட்டியதாக ஒப்புக்கொண்டதையும் மற்றைய சாட்சியால் சந்தேகநபர் எவரையும் அடையாளம் காண முடியவில்லை என்பதையும் உடல் காயம் ஏற்பட்டதைக் குறிக்கும் எந்தத் தகுதியான மருத்துவ அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும் வைத்து வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அத்துடன் 1வது சந்தேகநபர் தனது குழந்தையின் பிறந்தநாள் நிகழ்வு மற்றும் மத சடங்குகளில் கலந்து கொண்டதைக் காட்டுவதை குறிக்கும் புகைப்படங்கள் மூலம் சம்பவம் இடம்பெற்ற நாளில் சம்பவ இடத்தில் சந்தேக நபர் இல்லாததையும் சட்டதரணிகள் நிரூபித்தனர்.
குற்றவியல் சட்டத்தின்படி நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் குறிப்பிட்ட குற்றத்தை அரச தரப்பினர் சார்பாக ஆஜராகிய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிரூபிக்க தவறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், இரண்டு புலனாய்வு அதிகாரிகளையும் விடுதலை செய்தது.
இது ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு முக்கிய தீர்ப்பாகும்.