இலங்கையில் உள்ள சில இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள், நாட்டின் கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையிலும் சட்ட விரோத வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள அருகம்பே, உல்ல, கோமாரி மற்றும் பானம போன்ற சுற்றுலா தலங்களை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேலியர்கள் உட்பட சில வெளிநாட்டினர், சட்ட விதிகளுக்கு அப்பால் உள்ளூர் பிரதிநிதிகள் மூலம் அனுமதி பெறாத இரவு விடுதிகளையும் விருந்தினர் இல்லங்களையும் நடத்தி வருவதாக சுற்றுலாத் துறையை நன்கு அறிந்த வட்டாரகள் டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளன.
“இந்த நிறுவனங்கள் குடியேற்றச் சட்டங்களையும் வணிகச் சட்டங்களையும் தவிர்ப்பதற்காக இலங்கைப் பங்காளர்களின் பெயர்களில் செயல்படுகின்றன,” என்றும் அந்த வட்டாரம் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த இடங்களில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகளும் குற்றம் சாட்டுகின்றனர், அவை பெரும்பாலும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற மூடிய சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இரகசியமானதும் கண்டுபிடிக்க கடினமானதுமான நெட்வொர்க்குகளால் சந்தைப்படுத்தப்படுகின்றன, இந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து கிடைக்கும் வருமானம், உண்டியல் போன்ற முறைசாரா பணப் பரிமாற்ற முறைகள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது, இது நாட்டின் சுற்றுலா வருவாயிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
வெலிகம மற்றும் உனவட்டுன போன்ற சுற்றுலாப் பயணிகள் அதிகம் உலாவும் பகுதிகளிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன, அங்கு வெளிநாட்டினர் சட்டவிரோத விருந்தினர் இல்லங்கள் முதல் டாக்ஸி சேவைகளை நடத்துவது வரை.பல சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஹீப்ரு மொழியில் பெயர் பதித்த பல உல்லாச விடுதிகள்மலையகத்துக்கும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றுக்கு மத்தியில் இஸ்ரேலிய நாட்டினர் கொழும்பு, வெலிகம மற்றும் எல்ல பிரதேசங்களில் மூன்று சபாத் இல்லங்களை – யூத மத நிலையங்கள் – நடத்தி வருவதாக அண்மையில் பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் மத விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதில் பௌத்தம், இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவத்தை மட்டுமே சட்டம் அங்கீகரிப்பதால், புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் இந்த நிறுவனங்களை ஏற்கனவே உள்ள சட்ட விதிகளின் கீழ் கண்காணிக்கவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ முடியவில்லை எனவும் தெரிய வருகிறது.