தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு கொழும்பு, தெமட்டகொட வீதியிலுள்ள இஸ்லாமிக் புக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
09 மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டி அன்று நடைபெறும்.
1972 ஆம் ஆண்டு அந்நாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் மர்ஹும் வி. ஏ. கபூரினால் வடிவமைக்கப்பட்டு, ராவுத்தர் நைனா முஹம்மதினால் அவருக்கே உரிய பாணியில் நீண்ட காலமாக முஸ்லிம் சேவையில் ஒரு ஜனரஞ்சக நிகழ்ச்சியாக ஒலிபரப்பாகி வந்த அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சி, சில தவிர்க்க முடியாத காரணங்களினால் 1990 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் 1999 முதல் அனுசரணை நிகழ்ச்சியாக காலை வேளை முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகத் தொடங்கியது.
2005 ஆம் ஆண்டு முதல் கொழும்பு இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்க முன்வந்து இன்றுடன் 20 வருடங்களாக தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வருகின்றது.
இதுவரை 2005 ஆம் ஆண்டு BMICH இலும், 2012 ஆம் ஆண்டு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும், 2017 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆனந்த சமரகோன் கலையகத்திலும் மூன்று இறுதிப் போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு, 04 ஆவது இறுதிப் போட்டி நிகழ்ச்சி நாளை 23 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு இஸ்லாமிக் புக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடாத்த முஸ்லிம் சேவையும், இஸ்லாமிக் புக் ஹவுஸும் இணைந்து ஏற்பாடுகளைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)