முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற அடிப்படையில் அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் மஹிந்த பத்திரண, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி மோகன் விஜேவிக்ரம ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார். சட்டமூலத்தின் பல விதிகள் மக்களின் இறையாண்மையையும் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக, இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேராவும், மேலும் இரண்டு நபர்களும் இந்த சட்டமூலத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.