வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுள்ளன.
இன்று (22) காலை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக மத்திய தபால் நிலையத்தைச் சுற்றி விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு தொடங்கிய தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று 5 ஆவது நாளாக தொடர்கிறது.
மேலும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக தபால் சேவைகளைப் பெற வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதனிடையே, பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தாமல் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அகில இலங்கை பிரதி தபால் ஊழியர்கள் சங்கத்தின் பொருளாளர் ரவீந்திர அமரஜீவ, சக தொழிற்சங்க பிரதிநிதிகளை வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், இன்று பணிக்கு வராத அனைத்து தபால் ஊழியர்களும் தங்கள் பதவிகளை விட்டு தானாகவே விலகியதாக கருதப்படுவார்கள் என்று தபால் மா அதிபர் ருவன் சத்குமார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதால், முறையான விடுப்பு ஒப்புதல் இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத தபால் ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.
மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தபால் ஊழியர்களும் தங்கள் மாத சம்பளம் தேவைப்பட்டால் உடனடியாக பணிக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.